×

எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள்! நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் என்பவர் நல்ல மரபுகளை பின்பற்றி, துணிச்சலோடு, தகவல்கள் மற்றும் தரவுகளோடு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தீவிரமாக குரலெழுப்பி போராடுவது அழகு. அதே உறுப்பினர் ஆளுங்கட்சியாகும்போது மேலும் அமைச்சராகும்போது, அமைதியும், அடக்கமும், அனுதாப குணமும் அழகு, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது
 

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் என்பவர் நல்ல மரபுகளை பின்பற்றி, துணிச்சலோடு, தகவல்கள் மற்றும் தரவுகளோடு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தீவிரமாக குரலெழுப்பி போராடுவது அழகு. அதே உறுப்பினர் ஆளுங்கட்சியாகும்போது மேலும் அமைச்சராகும்போது, அமைதியும், அடக்கமும், அனுதாப குணமும் அழகு, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது தகவல்கள் பலவற்றை திரட்டி ஆராய்ச்சி செய்து எவ்வாறு எனது தொகுதி மக்களுக்கான உரிமைகள், நன்மைகளுக்கு போராடினேனோ, முழு மாநிலத்திற்கும் அமைச்சரான பிறகு அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் அரசு நிர்வாகத்தை திறம்பட செலுத்துவதுதான் என் இலக்கு. அதன் அடிப்படையில் கொள்கைகள், விதிமுறைகளை, செயல்பாடுகளை நான் அமைத்துக்கொண்டுள்ளேன். நான் கடந்தவாரம் சில ஊடக விவாதங்களில் கலந்துகொண்டேன். எனினும் ஊடகங்களிடமிருந்து வந்த அழைப்பில் 1/3 ஐ மட்டுமே ஏற்றுக்கொண்டேன் என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும். நிச்சயமாக எங்களின் முதல் கடமை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்தான். ஆனாலும் கூட கொரோனா தடுப்பு நடவடிக்கை முயற்சிகளுக்கு மத்தியில் முதல்வரின் வெளிப்படையான செயல்பாடு மற்றும் மக்களுடனான நேரடி தகவல் தொடர்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக நான் சில நேர்காணல்களில் பங்கேற்கிறேன்.

கடந்த சில நாட்களாக எனது பழைய காணொளிகள் அதிகளவில் பகிரப்பட்டுவருவதை அறிந்தேன். அவை கடந்த காலங்களில் பல கருத்தரங்கள், செய்தியாளர்கள் சந்திப்புகள், மாநாடு, இணையவழி உரையாடல்கள், விவாதங்கள் மற்றும் நான் மக்களிடையே நேரடியாக உரையாடிய காணொலிகளாகும்

இப்போதுநான் அமைச்சரான பின் அக்காணொளிகளை முதல் முறையாக பார்ப்பவர்கள் அதை வெட்டி, ஒட்டி பலருக்கும் பகிர்ந்துவருகிறார். பலரும் இக்காணொளிகளை நான் அமைச்சரான பின் பேசிய காணொலிகளாக கருதி என்னை மிகையாக பாராட்டியும், மற்றவர்களை விமர்சனம் செய்தும் கருத்திடுவது, பகிர்வது எனக்கு வேதனையளிக்கிறது.

உதாரணத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு வரும் காலங்களில் நான் உங்களோடு இணைந்து பணியாற்றிட தயாராக உள்ளேன் என கூறிவிட்டு என்னை வாழ்த்தினார். இதுபோன்று அரசியலில் பெருந்தன்மை மிகவும் பாராட்டத்தக்கது. கற்றுக்கொள்ள வேண்டியது.

ஆகவே என்னை மிகையாக புகழ்வதையும் அடுத்தவர்களை எதிர்மறையாக விமர்சிப்பதையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அது வாக்குவாதம் செய்வதற்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் எதிர்கால நன்மைக்கு உகந்ததல்ல. நாம் அனைத்து தளங்களிலும் அமைதியாக இருக்க வேண்டும். தயவு செய்து எனது செயல்பாடுகளின் விளைவுகளை காணும்வரை காத்திருந்து அதன் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள். நானும் என் தலைவர் முதல்வர் ஸ்டாலினின் வழியில் கட்சி வேறுபாடுகள் கடந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் கைக்கோர்த்து பணியாற்றிட தயாராக இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.