ஊரடங்கு பணியில் இருந்த டிராஃபிக் போலீஸ் மாரடைப்பால் திடீர் மரணம் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகிறார்கள்
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவில் காவலராக இருந்த அருண்காந்தி, நேற்று சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் ஊடரங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு 3 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
உடனே உடனிருந்த காவலர்கள் அவரை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அருண்காந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் சகா காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ” பாதுகாப்புப் பணியில் மாரடைப்பால் மறைந்த, மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் அருண்காந்தியின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.நெருக்கடியான இக்காலத்தில் காவலர்களுக்கு பணிச்சுமை, மனஅழுத்தம் ஏற்படாதவாறு DGP-யும், அரசும் அக்கறை காட்ட வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.