‘அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் ‘: அனைத்திந்திய இந்து மகாசபா கட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு!
மாநில செயலாளராகப் பதவி வகித்த நிரஞ்சனி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்
சென்னை: இந்து மகா சபா மாநிலத் தலைவர் மீது அக்கட்சியின் பெண் மாநிலச் செயலாளர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் அனைத்திந்திய இந்து மகாசபா கட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் தலைவர் ஸ்ரீகண்டன். 50 வயதான இவர் மீது அக்கட்சியின் மகளிர் பிரிவில் மாநில செயலாளராகப் பதவி வகித்த நிரஞ்சனி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ‘திருவள்ளூரை சேர்ந்த நான் கடந்த 2016-ம் ஆண்டு அனைத்திந்திய இந்து மகாசபாவில் மகளிர் பிரிவில் மாநில செயலாளராகக் கட்சியில் இணைந்தேன். பின்னர் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தேன். இக்கட்சியின் தலைவர் ஸ்ரீகண்டனுக்கு மொழி பிரச்னை இருப்பதால் அவர் கட்சிப் பணிகளுக்காக என்னை வெளியூர்களுக்கு அழைத்து சென்றார். அதற்கான கமிஷன் தொகையையும் தருவதாக கூறினார். அப்படி செல்வது பயன்படுத்தி எனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் தன்னைத் திருமணம் செய்துகொள்ள ஸ்ரீகண்டன் வற்புறுத்தினார். இதனால் கட்சியிலிருந்து விலகினேன். என்னை பற்றி அவதூறு பரப்பிய அவர், மீண்டும் கட்சியில் இணைய சொல்லி என் குடும்பத்துக்கும் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. அதனால் ஸ்ரீகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று அந்த புகாரின் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.