அடுத்தவர் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்ட அண்ணாச்சியை உலுக்கி எடுக்கும் உச்சநீதிமன்றம்!
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபால் உடனே சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபால் உடனே சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஜீவஜோதி. சரவண பவன் ஹோட்டல் மேலாளரின் மகளான ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். ஜீவஜோதியின் மீது சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரை அடையும் நோக்கில் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று ராஜகோபால் கொலை செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த டேனியல், கார்மேகம், ஹூசைன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம், காசி விஸ்வநாதன் 7 முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.இந்த கொலை வழக்கின் பகுதியாக பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கான கடத்தல் வழக்கில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டுகளும், மற்ற 8 பேருக்கு இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த இரண்டு வழக்குகளிலும் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதே சமயம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், கிழமை நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரித்து உத்தரவிட்டது.
அதன்பின்னர் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. அத்துடன் தற்போது ஜாமீனில் இருக்கும் ராஜகோபால் வருகிற ஜூலை மாதம் 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தவிர 9 பேரும் சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.ராஜகோபாலுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று அவர் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபால் உடனே சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருநாள் கூட உங்களால் சிறையில் இருக்க முடியாதா ? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.