நெடுஞ்சாலையில் அரிவாளை தூக்கிக்கிட்டு சீன் போட்ட வாலிபர்கள்! தட்டி தூக்கிய திண்டுக்கல் போலீஸ்!
திண்டுக்கல்–பழனி சாலையில் முத்தனம்பட்டி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபடி, கையில் அரிவாளை வைத்துக்கொண்டு சுழற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில், சார்பு ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் போலீசார் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில் மாங்கரையைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கோகுல்குமார் (24), முருகன் மகன் துளசி (25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.