×

தீர்ப்பை கேட்டவுடன் நீதிமன்றத்திலேயே கையை அறுத்து கொண்ட வாலிபர் 
 

 

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தனது பைக்கிற்கு போக்குவரத்து போலீசார் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்ததால், மன முடைந்த வாலிபர் காங்கேயம் நீதிமன்றத்திற்குள் தனது கையை பிளேடால் அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம், காங்கேயம் - கரூர் சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காங்கேயம் நோக்கி வந்த கரூர் மாவட்டம், பரமத்தியை சேர்ந்தவர் வினோத் (28) என்பவரின் இரு சக்கர வாகனத்தை போக்குவரத்து போலீசார் நிறுத்தி தணிக்கை செய்த போது, அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். பின் போலீசாரிடம் வாலிபர் விதிக்கப்பட்ட அபராதத்தை ஆன்லைனில் கட்டிக்கொள்வதாகவும், தனது தந்தைக்கு மருத்துவ பணிக்காக செல்வதால் இரு சக்கர வாகனத்தை கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு போலீசார் மறுத்ததாகவும், அபராதத்தை நீதிமன்றத்தில் தான் கட்ட வேண்டும் என கூறி வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வாலிபர் வினோத் நேரடியாக காங்கேயம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அங்கும் வாகனத்தை கேட்க, பணியில் இருந்த போலீசார் மற்றும் ஊழியர்கள் வாலிபரை வெளியே விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் பிளேடால் கையை அறுத்து கொண்டார். இதை கண்ட நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீசார் செய்வதறியாது திகைத்தனர். பின் அவரை போக்கு வண்டியில் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அலட்சியமாக அனுப்பி வைத்தனர். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.