"சொன்னீங்களே... செஞ்சீங்களா முதல்வர் அவர்களே?" - அரசுத் துறைகளின் கடன் குறித்து நயினார் நாகேந்திரன் விளாசல்!
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழக அரசின் போக்குவரத்துத் துறை, மின்சாரத்துறை, டாஸ்மாக் உள்ளிட்ட அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்துடன் செயல்படும் வகையில் சீரமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னீங்களே, செஞ்சீங்களா? ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதாவது என்பது போல, நஷ்டத்தில் உள்ள அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுக்கப் போகிறோம் என்று தேர்தல் அறிக்கையில் அச்சடித்துவிட்டு அனைத்து அரசுத் துறைகளையும் கடனில் மூழ்கடித்துவிட்டீர்கள்.
இந்தியாவிலேயே அதிக இழப்புகளைச் சந்தித்த மின்வாரியங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது, ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களைக் கொடுக்க முடியாமலும் மக்களுக்குத் தரமான பஸ்கள் வழங்க முடியாமலும் போக்குவரத்துத்துறை முடங்கிக் கிடக்கிறது, அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்குப் பத்து ரூபாய் அதிகம் வசூலித்து டாஸ்மாக் முழுக்க ஊழல் மண்டிக் கிடக்கிறது.
உங்கள் ஆட்சி முடிய இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பை எப்படி சரி கட்டப்போகிறீர்கள் முதல்வரே? மீண்டும் கடனுக்கு மேல் கடன் வாங்கி தமிழகத்தின் கழுத்தை மேலும் நெரிக்கப் போகிறீர்களா? இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.