மொபைல் டவரே தேவையில்லை..! 'சாட்டிலைட் போனை' அறிமுகம் செய்தது BSNL..!
பொதுத்துறை நிறுவனமான BSNL ரூ.1.34 லட்சம் மதிப்பில் சாட்டிலைட் போனை அறிமுகம் செய்துள்ளது .மொபைல்போன் டவர் கிடைக்காத இடங்களில் உள்ளவர்களின் வசதிக்காக இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இது வழக்கமான மொபைல்போன் டவர்களை பயன்படுத்தாமல், செயற்கைக்கோள் வாயிலாக இயங்கக்கூடியது எனத் தெரிவித்துள்ளது. சாட்டிலைட் போன்கள், நேரடியாக செயற்கைக்கோள்களுடன் தொடர்பு கொள்ளும். இதனால், மொபைல்போன் டவர் இல்லாத இடங்களிலும் பயனர்கள் இந்த போன் வாயிலாக மற்றவர்களுடன் வாய்ஸ் கால் பேசலாம். பேரிடர் அல்லது தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகள் இல்லாத இடங்களிலும் இந்த போன் பெரிதும் பயன்படும்.ரிமோட் பகுதிகளில் செயற்கைக்கோள் வாயிலாக தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தி தரும், இன்மார்சாட் என்ற சர்வதேச செயற்கைக்கோள் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து இந்த சாட்டிலைட் போனை பிஎஸ்என்எல் தயாரித்துள்ளது.
இந்த போனின் சிறப்பம்சங்கள்:
1. நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் வேலை செய்யும்
2. ரிமோட் பகுதிகளில் இருந்தும் வாய்ஸ் கால்
3. பேரிடர் காலங்களில் அவசர கால உதவி கோரும் எஸ்ஓஎஸ் வசதி
4. சார்ஜிங் செய்யும் வசதி இல்லாத இடங்களிலும் நீண்ட நேரம் செயல்படும் பேட்டரி
5. கடினமான சூழலையும் தாங்கும் உறுதியான வடிவமைப்பு
இந்த போனை சாமானிய மக்கள் வாங்க முடியாது. வழக்கமான மொபைல் நெட்வொர்க் கிடைக்காத பகுதிகளில் நம்பகமான தகவல் தொடர்பு தேவைப்படும் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்காக இந்த சாட்டிலைட் போன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, பாதுகாப்புத் துறை, கடல்சார் நடவடிக்கைகள், பேரிடர் மீட்புப் பணிகள், சுரங்கத் தொழில், தொலைதூரத் தொழிற்சாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் வழியாகப் பயணிக்கும் யாத்ரீகர்கள் மற்றும் சாகசப் பயணம் ஆகியோருக்கு இந்த போன்கள் பயன்படும்.இந்தபோனை வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் தொலைத்தொடர்புத்துறையிடம் இருந்து அனுமதியை பெற வேண்டும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. தேவையான அங்கீகாரம் இல்லாமல் சாட்டிலைட் போனை அல்லது இயக்குவது இந்திய விதிமுறைகளின்படி சட்டரீதியான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
இந்த போனின் விலை அனைத்து வரிகளும் சேர்தது 1,34,166 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.