தனிமையில் இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்..!
திருப்பத்தூர் பிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதுடைய வடிவேல். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவருக்கு, கடந்த ஜூன் மாதம் தனது பெயர் கவிதா என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த பெண், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி, கடந்த (ஜூன் 9) ஆம் தேதி வடிவேலிடம் இருந்து ஜி-பே மூலம் ரூ.4,500 பெற்றுள்ளார். அதன் பிறகு இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.
நாளடைவில் இவர்களது பழக்கமானது நெருக்கமான நிலையில் , காரைக்குடிக்கு வந்தால் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்கலாம் என அந்த பெண் வடிவேலுவுக்கு ஆசை வார்த்தைகள் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனை நம்பிய வடிவேல் கடந்த (ஜூன் 24)ஆம் தேதி காரைக்குடிக்கு சென்றுள்ளார். அப்போது, கொஞ்சம் தனிமையாக பேசலாம் என்று கூறி அந்த பெண் அவரை அங்கிருந்த பழைய ஓட்டு வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால், அங்கு சென்றதும் வடிவேலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் ஏற்கனவே பதுங்கியிருந்த மர்ம நபர்கள் திடீரென வெளியே வந்து, வடிவேலை வலுக் கட்டாயமாக நிர்வாணமாக்கி தாக்கியதுடன், ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று வடிவேல் கூறிய நிலையில், அவரிடமிருந்த ஹோண்டா இருசக்கர வாகனம் மற்றும் செல்போனையும் பறித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு சென்ற அவர் இந்த சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.