×

தலை தீபாவளி கொண்டாட வந்த புதுமணப்பெண் வெள்ளத்தில் சிக்கி பலி!!

 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் லேகா என்கின்ற 23 வயது பெண்ணுக்கும் , நாகர்கோவிலை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தலை தீபாவளி கொண்டாடுவதற்காக மகளையும் , மருமகனையும் முருகன் சிதம்பராபுரத்திற்கு அழைத்து வந்துள்ளார். 

ஆட்டோவில் சிதம்பரத்திற்கு களக்காடு பேருந்து நிலையத்திலிருந்து மூவரும் சென்று கொண்டிருந்தபோது தொடர் கனமழை காரணமாக அங்கு இருந்த பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது.  இதனால்  3 பேரும் நடந்து சென்று பாலத்தை கடக்க முயன்று உள்ளனர் . அப்போது மூவரும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.  இதில் முருகனும், பரமேஸ்வரனும் பத்திரமாக கரை சேர்ந்தனர்.

ஆனால் முருகனின் மகள் லேகா காணாமல்போயுள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த களக்காடு போலீசார் மற்றும் நாங்குநேரி தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லேகாவை  இரவு முழுவதும் தேடியுள்ளனர்.  இந்த சூழலில் இன்று அதிகாலை புதுமண பெண் லேகா சடலமாக மீட்கப்பட்டார்.  தலை தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் புதுமணப்பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.