×

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை தீபாவளி பரிசாக அளியுங்கள் : ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

 

அகவிலைப்படியை நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது. ஏற்கனவே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 11 விழுக்காடு அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அளித்த போது அதனை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விரிவுபடுத்த,  வருகின்ற 2022 ஜனவரி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது.  பின்னர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் தொடர் வலியுறுத்தி தொடர்ந்து மூன்று மாதங்கள் முன்னதாக அதாவது வருகின்ற 2002 ஜனவரி முதல் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது.

இந்த சூழ்நிலையில் தீபாவளி பரிசாக மத்திய அரசும் தனது ஊழியர்களுக்கு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் மேலும் 3 விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தி வழங்கியுள்ளது.  அதாவது கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் 30 விழுக்காடு அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் தரப்போகிறார்கள். ஆனால் மாநில அரசு ஊழியர்கள் 17 விழுக்காடு அகவிலைப்படி தான் பெற்று வருகிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கும் தமிழ்நாடு ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கும் ஆன அகவிலைப்படி வித்தியாசம் 14% . இந்த 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளி பரிசாக தமிழக அரசு வழங்க வேண்டுமென்பதே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தேர்தலுக்கு முன் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு தேர்தலுக்கு பின் விலைவாசி உயர்வை ஓரளவுக்கு ஈடுகட்ட வழங்கப்படும் அகவிலைப்படியையே  நிறுத்திவைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. எனவே மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படியை அளித்தது போல்  தமிழக அரசு, ஊழியர்கள் , ஆசிரியர்கள் , ஓய்வூதியதாரர்களுக்கான  14 விழுக்காடு அகவிலைப்படி தீபாவளி பரிசாக  உடனே வழங்க தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிட வேண்டும் " என்று வலியுறுத்தியுள்ளார்.