நாளை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய் ஆஜர்?
தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா தொடர்ந்து விவாகரத்து வழக்கில் நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்படவுள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்படி 26.02.2026 அன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் வழக்கில் தொடர்புடைய சங்கீதா மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆகிய இருவருக்கும் நீதிமன்றத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரில் நீதிமன்றத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.