வீட்டுமனை பட்டா, தம்பிக்கு வீடு கொடுப்பதால் போன உயிரை திரும்பி வருமா? பிரேமலதா!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு தேமுதிக சார்பில் திருப்புவனத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:-
அஜித்குமாரை போலீஸார் அடித்தே கொன்றுள்ளனர். அவரைக் கொன்றவர்களுக்கும் இதுபோன்ற தண்டனை கொடுக்க வேண்டும். புகார் கொடுத்த நிகிதா குறித்து சரிவர விசாரிக்கவில்லை. எனவே, இவ்விவகாரத்தில் சிபிஐ உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் வரதட்சணைக் கொடுமையால் 4 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. போதை வழக்கில் 2 நடிகர்களை கைது செய்து, இந்த விவகாரத்தை திசை திருப்புகின்றனர். திமுக ஆட்சி என்றாலே அராஜகமும், ரவுடியிசமும்தான். அனைத்து காவல் நிலையங்களிலும், கைதிகளை விசாரிக்கும் இடங்களிலும் சிசிவிடி கேமராக்களை பொருத்த வேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் காவல் துறை தாங்காது. மது ஒழிந்தால்தான் தமிழகத்துக்கு விடிவுகாலம் பிறக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, அஜித்குமார் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மடப்புரத்தில் ஒரு அப்பாவி இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். விசாரணை கைதி கொலை இனி தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது. நிக்கிதா என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் இவ்வளவு செய்திருக்கிறார்கள் முதலில் அந்தப் பெண்ணை அழைத்து விசாரணை நடத்த வேண்டும். அஜித் குமார் கொலை வழக்கில் பின்னால் பல மர்மங்கள் உள்ளதாகவும் அந்த மர்மங்கள் வெளிப்பட வேண்டும். உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
தமிழக அரசு, அறநிலையத்துறை, காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? காவல் துறையினர் விசாரணை கைதிகளை அடிப்பதை முதலில் நிறுத்தி கொள்ள வேண்டும், வீட்டுமனை பட்டா, தம்பிக்கு வீடு கொடுப்பதால் போன உயிரை திரும்பி வருமா? புதிய சட்டம் இயற்றி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து வருபவர்களை அடிக்கும் உரிமையை பறிக்க வேண்டும், தனிப்படையை கலைத்திருந்தாலும் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்” என்றார்.
பின்பு விஜய் குறித்த கேள்விக்கு, “விஜய் சொல்லும் கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது” என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “கட்சித் தலைவர்கள் அனைவரும் அடுத்த தேர்தலையும் அடுத்த வெற்றியைப் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். தமிழக மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. தமிழகத்தில் 95 சதவிகிதம் டாஸ்மாக், போதை பொருள் கலாச்சாரம் பெருகிவிட்டது. அதனை திசைதிருப்ப இரண்டு அப்பாவி நடிகர்களை பலி கடா ஆக்கியுள்ளனர். தேமுதிகவின் சார்பில் ஜனவரி 9 கடலூரில் நடக்கும் மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமையும்” என்று உறுதிபட தெரிவித்தார்.