மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செஞ்சா ஆட்சி கவிழுமா? 1963 முதல் தொடரும் 'மதுரை சென்டிமென்ட்'..!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். பல்வேறு சிறப்புகள், அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னிடம் கொண்டுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 08.04.2009 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டலத்தில் 02.02.2018ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக மண்டபம் முழுமையாக சேதமடைந்தது.
ஆமக விதிப்படி மீண்டும் கும்பாபிஷேகம் செய்வதற்காக ரூ.15.81 கோடி தமிழக அரசு நிதி மற்றும் உபயதாரர்கள் நிதி ரூ.16.47 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடியில் 186 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இந்நிலையில் சமீபத்தில் கோவில் திருப்பணிகளின் சீராய்வு கூட்டத்தில் 2026ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி வியாழக்கிழமை அன்று மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேகத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பராபவ ஆண்டு ஆவணி மாதம் 31ம் தேதியான செப்டம்பர் 17ம் தேதியன்று காலை 07.45 மணிக்கு மேல், 08.10 மணிக்கு திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி மாதத்தில் ஆனி உத்திர திருமஞ்சனம், ஆனி ஊஞ்சல் உற்சவம் ஆகியவை ஒன்பது நாள் திருவிழாவாக நடைபெறும். இதைத் தொடர்ந்து ஆவணி மாத மூலம் நட்சத்திரத்தில் ஆவணி மூலத் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். சிவபெருமான், பாண்டிய மன்னனுக்காக திருவிளையாடல் புரிந்ததை காட்டும் விதமாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை, நரியை பரியாக்கிய லீலை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். இந்த விழா 10 முதல் 12 நாட்கள் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவிலில் மிக முக்கியமான விழாக்களில் இதுவும் ஒன்றாகும். வழக்கமாக ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களிலேயே இவ்விழா நடத்தப்படும். இந்த விழா நிறைவடைந்த பிறகு கும்பாபிஷேக விழாவிற்கான பணிகள், யாக சாலை அமைக்கும் பணிகள் ஆகியவை துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு கருத்து தற்போது உலா வருகிறது. அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது அரசியல் மாற்றங்கள் நிகழும் என்பது போன்ற நம்பிக்கைகள் இன்னும் நம்பப்பட்டு வருகிறது.
பலர் சமூகவலைத்தளத்தில் நேற்று திமுக அரசு ஆட்சி கவிழ்ததை தொடர்புபடுத்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக தேதியை அறிவித்த பிறகு மீண்டும் ஒரு ஆளும் அரசு கவிழ்ந்துள்ளதாக பேச தொடங்கியுள்ளனர். அதாவது, ஒரு ஆளும் அரசு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கும்பாபிஷேகத்தை அறிவித்து நடத்தும் போதெல்லாம், அடுத்த தேர்தலில் அது மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை. 1963, 1974, 1995 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டன, ஒவ்வொரு முறையும், விழாவை ஏற்பாடு செய்த அரசு அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தது.
ஆனால் உண்மை என்னவென்றால் 2009-க்கு பிறகு 2021-ல் நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம், கொரோனா மற்றும் தீ விபத்து காரணமாக தள்ளிப்போனதே தவிர, ஆட்சி மாற்றத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை.