×

ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி.. - தமிழக அரசு  அறிவிப்பு..

 

ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


நாடு முழுவதும்  கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  மூன்றாவது அலையாக தாக்கிக்கொண்டிருக்கும் கொரோனா தினசரி பாதிப்பு இந்தியாவில் ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது.  அதேபோல் 21 மாநிலங்களில் 3,017  பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தினசரி பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகத்திலும் புதிய கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல தடை, பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்பு, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் நாளை (09.01.22) முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.  முழு ஊரடங்கான நாளை, திருமண நிகழ்ச்சிகளுக்கு  செல்ல அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருமண அழைப்பிதழை காண்பித்து பொதுமக்கள் தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம் எனவும்,  திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே போட்டித்தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு ஞாயிறு முழு ஊரடங்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.