பெண்களுக்கு எங்கு தான் பாதுகாப்போ..? பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமை..!
பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், ஊர்க்காவல் படைத் தேர்வின்போது மயங்கி விழுந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றியபோது, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. புத்த கயா பகுதியில், ஜூலை 24ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகவும், ஊர்காவல் படைத் தேர்வுக்கு உடற்தகுதித் தேர்வின்போது 29 வயது பெண் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், உடல்தகுதி தேர்வின்போது, பெண் மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார். ஆம்புலன்ஸில், தான் மயக்கமுற்று இருந்தபோது, சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் குற்றம்சாட்டியிருக்கிறார். பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் இருவரும் செய்துசெய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல் வன்கொடுமையை உறுதி செய்திருக்கிறார்கள். குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் திருப்தியில்லை என்றும் மேற்கொண்டு தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உடற்தகுதித் தேர்வுக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பிகார் சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிகாரில் பேய்களின் ஆட்சியின்கீழ் இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து நிதிஷ்குமார் அரசாங்கம் மௌனம் காட்டுகிறது. பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால், நிதிஷ்குமார் அரசின் அதிகாரத்துக்கு வெளியே வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
மேலும், பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் கூறுகையில், கயா மாவட்டத்தில் நடந்த சம்பவமானது, சட்டம் ஒழுங்கு சரிவை பிரதிபலிக்கிறது. இது அரசின் கட்டுக்கடங்காத நடத்தையைக் காட்டுகிறது. சிறுமிக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார்.