நெசவாளர்களுக்கு மாதம் ரூ.5000 உரிமைத் தொகை வழங்க வேண்டும் - சி. சண்முகம் கோரிக்கை..!
தறி ஆடையகத்தின் நிறுவனர் சி. சண்முகம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, அவர் கூறியதாவது;-
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு அடுத்தபடியாக பெரும்பான்மை உழைக்கும் சமூகம் நெசவாளர்கள் தான். உழவர்கள் உணவை உற்பத்தி செய்து மக்களின் பசியைப் போக்குகிறார்கள் என்றால், நெசவாளர்கள் ஆடைகளை தயாரித்து மக்களின் மானத்தைக் காப்பவர்கள் நெசவாளர்கள் தான். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். நெசவாளர்களின் நலன்களை காப்பதற்காக கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய ஜனநாயகத்தின் நான்காம் தூண்களான பத்திரிகையாளர்கள் வாயிலாக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
கோரிக்கைகள்:
1. நெசவுத் தொழில் நலிவடைந்து வரும் நிலையில் அதை மீட்டெடுப்பதற்காக பல்வேறு புதிய திட்டங்களையும், சீர்திருத்தங்களையும் செய்ய வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை தாக்கல் செய்யப்படுவதைப் போல நெசவுத்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
2. நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில், நெசவாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நெசவாளர்களுக்கு மாதம் ரூ.5000 உரிமைத் தொகை வழங்க வேண்டும்.
3. பட்டு நெசவாளர்களுக்கும், கைத்தறி நெசவாளர்களுக்கும் 30% கூலி உயர்வு வழங்க வகை செய்ய வேண்டும். ஆண்டுக்கு 10% கூலி உயர்வு வழங்குவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.
4. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் நெசவாளர்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
5. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பட்டுப்புடவைகள் இறக்குமதி செய்யப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும்.
6. நெசவுத் தொழிலுக்கு தேவையான நூல், சாயம் உள்ளிட்ட மூலப் பொருள்களுக்கு 50% மானியம் வழங்க வேண்டும்.
7. கைத்தறி வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தின் அளவு 500 யூனிட்டுகளாகவும், விசைத்தறி உள்ள வீடுகளுக்கான இலவச மின்சாரத்தின் அளவு 1500 யூனிட்டுகளாகவும் அதிகரிக்கப்பட வேண்டும்.
8. 12 விசைத்தறிகள் வரை உள்ள சிறிய விசைத்தறிக் கூடங்களுக்கு சூரிய ஒளி மின்னுற்பத்திக் கட்டமைப்பை ஏற்படுத்த 75% மானியம் வழங்க வேண்டும்.
9. ஆடை வடிவமைப்பு ( Designs), துணி தொழில்நுட்பம் ( Textile Technology) போன்ற படிப்புகளில் நெசவாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனி இட ஒதுக்கீடும், படிக்கும் போதே உதவித் தொகையும் வழங்க வேண்டும்.
10. கைத்தறி துணிகளை விற்பனை செய்ய அனைத்து நகரங்களிலும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும், ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக தனி பிராண்டு உருவாக்கப்பட வேண்டும். தறி என்ற எங்களின் பிராண்டை அரசு பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறோம்.
எங்களின் இந்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களையும், முதல்-அமைச்சரையும் நேரில் சந்தித்து வழங்க இருக்கிறோம். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.