தர்பூசணி வியாபாரிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்..! - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் தர்பூசணி சீசன் களைகட்டும் நிலையில், அதை முன்னிட்டு ஏராளமான விவசாயிகள் தர்பூசணியை பயிர் செய்து வளர்த்து வந்தனர். அறுவடை செய்து விற்பனைக்கு வர இருந்த நேரம், தர்பூசணி சிவப்பாக இருக்க ரசாயனம் கலக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் மக்கள் பீதியில் தர்பூசணி வாங்குவதை குறைத்ததால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்த நிலையில், அறுவை செய்வதற்கான செலவை விட, கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருந்ததால் பல இடங்களில் தர்பூசணி பழங்களை விவசாயிகள் டிராக்டர் ஏற்றி அழித்தனர். இதனால் தர்ப்பூசணி விவசாயிகள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். விவகாரம் பூதாகரமான நிலையில், சர்ச்சை வீடியோவை வெளியிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே தர்பூசணி விலை வீழ்ச்சி தொடர்பாக செங்கல்பட்டு விவசாய நலச் சங்க தலைவர் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், “தர்பூசணி பழம் தொடர்பாக அரசு அதிகாரிகள் தவறாக பரப்புரை செய்ததால் அதன் வியாபாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆகவே, தர்ப்பூசணி பழத்தில் நிறத்திற்காகவும் சுவைக்காகவும் ரசாயனம் கலக்கப்படுவதாக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
அத்துடன், விவசாயிகள் சாகுபடி செய்யும் தர்பூசணி பழங்களை தமிழக அரசே கொள்முதல் செய்து அதற்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இவ்வழக்கில் தமிழக அரசு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததாகவும், அதில் எந்தவித ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “தர்பூசணி குறித்து அதிகாரிகள் வேண்டும் என்றே பொதுமக்களிடையே தவறான பிரச்சாரத்தை பரப்பினர். இதனால், தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, இழப்பீடு கோரி விவசாயிகள் அளித்த மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன், வழக்கையும் முடித்து வைத்தார். இதனை ஏற்று விரைவில் தர்ப்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும் என்று கூறப்படுகிறது.