×

எச்சரித்தும் கேட்காத அவலம்! பிவண்டியில் 4 மாடி கட்டடம் இடிந்து 6 பேர் பலி; தொடரும் மீட்புப் பணி!

 

தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால், 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பல தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, போலீசார், தீயணைப்புப் படை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, இடிபாடுகளுக்குள் 8 முதல் 10 பேர் வரை சிக்கியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த ஒரு பெண்ணை உயிருடன் மீட்டனர்.

அவர் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இடிபாடுகளில் சிக்கியதில் இதுவரையில் 6 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

பாழடைந்த கட்டடம் என வகைப்படுத்தி, இந்தக் குடியிருப்பை காலி செய்யுமாறு, அங்கு வசித்து வந்தவர்களுக்கு பிவாண்டி மாநகராட்சி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதனை ஏற்று பெரும்பாலானோர் வெளியேறி விட்ட நிலையில், தரைதளத்தில் சில தொழிலாளர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறதுகட்டடம் மிகவும் ஆபத்தானது என மாநகராட்சியால் பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு, காலி செய்ய உத்தரவிடப்பட்ட பிறகும், கட்டடத்திற்குள் பழுதுபார்க்கும் பணியை செய்ய அனுமதித்தது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது