×

”இந்துக்களை விபச்சாரிகளின் பிள்ளைகள் என விமர்சித்த ஆ.ராசாவை எம்.பி. பதவியில் இருந்தே தூக்கப்போகிறோம்”

 

திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி யுமான ஆ.ராசா  இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய் சரண் தேஜஸ்வியிடம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர்  வி.பி. துரைசாமி தலைமையிலான பாஜகவினர் மனு அளித்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வி.பி. துரைசாமி, “திமுக எம்பி யும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ. ராசா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், இந்துக்களாக இருப்பவர்கள் எல்லாம் விபச்சாரிகள் பெற்ற பிள்ளைகள் என்றும் இந்தியாவில் வாழுகின்ற அனைத்து இந்துக்களின் மனதும் புண்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசிய ஆ.ராசா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் மனு அளித்தோம். மதம் ரீதியாகவும், சாதி ரீதியாகவும் இந்து மக்களுடைய மனதை புண்படுத்திய அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.மேலும் அவரை எம்.பி பதவியில் இருந்து பதவியிறக்கம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் பாரதி ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பில் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து உள்ளோம்.

நாமக்கல் காவல்துறை மட்டுமல்லாமல், தமிழக முழுவதும் உள்ள காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தவறினால் பாரதிய ஜனதா கட்சி மட்டும் இல்லாமல் இந்து மக்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வைக்க செய்வோம். நாடாளுமன்ற சபாநாயகரிடமும் புகார் அளித்து பதவியிறக்கம் செய்யவும் பாஜக நடவடிக்கை எடுக்க இருக்கிறது” எனக் கூறினார்.