புதிய வாக்காளர்களுக்கு 15 நாட்களில் வாக்காளர் அட்டை
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு இன்னும் 15 நாட்களில் வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதன்படி, உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச.19ம் தேதி முதல் ஜன 18ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் ஐன.30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி, தற்போது வரை 16 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்களுக்கு முதல் கட்டமாக அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது அந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த 15 நாட்களில் அனைவருக்கும் வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் புதிதாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்கள் என்று அனைவருக்கும் அடையாள அட்டை விநியோகம் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.