×

தவெக மாநாட்டிற்கு குவியும் தொண்டர்கள்.. “நாட்டில் பலர் வேலை வெட்டி இல்லாமல் இருப்பதை காட்டுகிறது” - விஜய்யை சீண்டிய சீமான்..!!

 

மாலை நடைபெறும் த.வெ.க மாநாட்டிற்கு அதிகாலை முதலே தொண்டர்கள் வருவது நாட்டில் பலர் வேலை வெட்டி இல்லாமல் இருப்பதை காட்டுவதாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.  


திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ தெரு நாய்கள் இல்லை என்றால் எலிகள் பெருகும், அதனால் பிளேக் நோய் வரும் அதனை கட்டுப்படுத்த போராட வேண்டும். தெரு நாய்களை முன்பே கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆர்வலராக இருந்தாலும் தமக்கு பாதிப்பு ஏற்படும் போது பயம் வந்துவிடும்.  அதை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது, ஆனால் கட்டுப்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.  திருடன், பேய் பயத்தை விட நாய் பயம் வந்துவிடும்.” என்றார்.  

மேலும்,  தமிழக வெற்றி கழகம் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் ஒரு ஆய்வாளர் இல்லை . அது ஒரு கட்சியின் மாநாடு. தமிழக வெற்றி கழக மாநாடு நோக்கம் வெற்றி அடைந்தால் சரிதான். முதல் நாளே மாநாட்டிற்கு சென்றது நாட்டில் வேலை இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. 

துணை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டும் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு திமுக எம்பிக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என எச்.ராஜா கூறியிருக்கிறார். அதற்கு சமீபத்தில் கனிமொழி எம்பி கூறும்போது,  நாங்கள் பாஜக கொள்கைகளில் மாறுபடுகிறோம், அவர்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்கள் எனக் கேள்வி எழுப்பினார். நீங்கள் என்ன செய்தீர்கள் என நான் கேள்வி எழுப்புகிறேன். ஆபரேஷன் செந்தூர் ஆதரித்து வெளிநாட்டிற்கு பிரதிநிதியாக சென்று பேசியபோது ஏன் இந்த கொள்கை தெரியவில்லை. தமிழுக்கும் தமிழருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்துள்ளது. 

திராவிடம் என்பது சமஸ்கிருத சொல் மாடல் என்பது ஆங்கில சொல் பாராளுமன்றத்தில் இல்லை என ஏன் நீங்கள் கேள்வி எழுப்பவில்லை. வாஜ்பாய் ஆட்சியில் அந்த கொள்கை ஏற்புடையதாக இருந்தது. ஆனால் இப்போது ஏற்கவில்லையா? குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசினீர்கள் மணிப்பூர் கலவரத்தை எதிர்த்து பேசினீர்கள். அப்போது கூட்டணியில் இருந்தீர்கள் தற்போது கூட்டணியில் இல்லை அதனால் தற்போது ஏற்கவில்லை என்கிறீர்கள். 

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்வது என்பது மகிழ்ச்சியான விஷயம். அதனை வரவேற்கிறேன். தெருவுக்குத் தெரு மது கடைகளை திறந்து வைத்துவிட்டு போதையை ஒழிப்பேன் என கூறுவது எப்படி. அவர்கள் பாஷையில் குடிசை ஒழிப்பு என கூறி குடிசையை கொளுத்தி விட்டு குடிசை ஒழிப்பு என்பார்கள்.  அதேபோல மது ஒழிப்பு எனக் கூறி மதுவை குடித்து தான் ஒழிக்க முடியும்  என்றார். பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்கள் பதவியை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் நல்ல சட்டம் தான். தவறு செய்யும் பலர் அதிகாரத்திற்கு வருவதை அது தடுக்கும். ” என்று கூறினார்