சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவருக்கு சொந்தமான எஸ்பிடி பட்டாசு தொழிற்சாலை இயங்கி வரும் நிலையில், இங்கு 20 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்த தொழிற்சாலையில் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த சூழலில் இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ஐந்து அறைகள் தரைமட்டமானது. இந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் விக்னேஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலை உரிமையாளர் கருப்பசாமி, ஊழியர் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து உயிரிழந்த விக்னேஸ்வரன் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.