கோடை விடுமுறை- நிரம்பி வழியும் கூட்டத்தால் திருப்பதியில் விஐபி டிக்கெட் ரத்து
கோடை விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வி.ஐ.பி. டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை வழங்க இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருவது வழக்கம். இதனால் திருமலையில் கூட்டம் நாளுக்கு நாள் தற்போது அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தானம் மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கும் வகையில் புதிய கொள்கையைச் செயல்படுத்தத் முடிவு செய்துள்ளனர். அதன்படி கோடைக்காலத்தில் விஐபி தரிசனங்களை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஜுலை மாதம் வரை முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் வி.ஐ.பி. தரிசனம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதையும் ரத்து செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து வரும் 6 ம் தேதி நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்பட உள்ளது. தற்போது சர்வ தரிசன டோக்கன்களைக் பெற்று வரும் பக்தர்களால் நேரடியாக இலவச தரிசனத்தில் வரிசையில் உள்ள பக்தர்களுக்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்தநிலையில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதால் தரிசனம் விரைவாக நிறைவடையும் என இதனால் பக்தர்கள் நீண்ட காத்திருப்பது தவிர்க்கப்பட்டு சாமி தரிசனம் செய்துகொள்ளலாம். அவ்வாறு ஒரு நாளைக்கு 80,000 பேருக்கு சாமி தரிசனம் செய்து வைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தினமும் 2 முதல் 3 மணி நேரம் விஐபி தரிசனங்களுக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது. இது ரத்து செய்யப்பட்டால், அந்த நேரத்தில் 15 ஆயிரம் இலவச தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் பெற முடியும். இந்தநிலையில் இன்று மே தினம் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் அனைத்தும் நிரம்பி பாட்டை கங்கெயம்மன் கோயில் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்திற்கு வரிசையில் வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரத்திற்கு பிறகே சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால் பொறுமையாக காத்திருந்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களுக்கான நேரம் வரை சாமி தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.