×

குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 15,000 ஆக அதிகரிக்க வேண்டும்- விஜயகாந்த்
 

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என திமுக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மூலம் கடந்த 2018-ம் ஆண்டு 12 ஆயிரம் காலிப்பணியிடங்களும், 2019 -ம் ஆண்டு 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கொரோனா தொற்று காலத்தில் தனியார் துறையில் பணியாற்றி வேலை இழந்தவர்கள், புதிதாக கல்லூரி படித்து முடித்தவர்கள் அதிகளவில் போட்டித் தேர்வில் கவனம் செலுத்தினர். இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் தேர்வில், 2 ஆண்டுகளாக நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகும் என்று போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு இலவு காத்த கிளி போல மாறிவிட்டது.

குறைந்த அளவிலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதால் 3 ஆண்டுகளாக போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த மாணவ, மாணவிகளின் மத்தியில் பெருத்த ஏமாற்றமும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் அரசுப்பணி கனவாகி போய்விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும் கூறியிருந்தது.

ஆனால் ஆட்சி அமைத்து 2 ஆண்டுகளாகியும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி பணி வழங்க வேண்டும் கொள்கிறேன்.