×

தேமுதிக ஊழல் இல்லாத கட்சி என சொல்லுவாங்க; ஆனால் ஓட்டு போட மாட்டாங்க- விஜய பிரபாகரன்

 

தமிழகத்தில் அதிகளவு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் காவிரி உபரி நீரை வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் இன்னு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், “இன்றைக்கு ஆசிரியர்கள் தினம் என்பதால் முதலில் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அதிக அளவு ஆளாகியுள்ள நிலையில் தமிழகத்தில் அதிகளவு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் உள்ளது. தற்போது அதிக அளவு போதை பொருட்கள் ஊடுருவி உள்ளதால் இதில் இளைஞர்களும், மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களை பள்ளிகளில் சரியான முறையில் ஆசிரியர்கள் வழி நடத்தினால் மாணவர்கள் தீய பழக்கங்களில் அடிபணியாமல் நல்ல வழியில் செல்ல முடியும்.

சமீபத்தில் நடந்த மாணவி ஸ்ரீமதி இறப்பு கொலையா? தற்கொலையா ? என யாரும் சொல்லவில்லை. திமுக ஆட்சி ஏன் ஸ்ரீமதிக்கு குரல் எழுப்பவில்லை? மாணவி ஸ்ரீமதியின் பெற்றோருக்கு திமுக அரசு சரியான முடிவை சொல்ல வேண்டும். மேட்டூர் காவிரி உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது அதனால் அந்த உபரி நீரை வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும். அப்படி இணைக்கும் நிலையில் சேலம் , கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். தேர்தல் நேரத்தில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவோம் என்று திமுக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இதுவரை கட்டவில்லை அதற்காக ஒரு செங்கல் ஆவது எடுத்து வைத்துள்ளார்களா ? போக்கஸ் ஆட்சி நடக்கிறது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சியாளர்கள் எல்லாம் காசு கொடுத்து ஓட்டு வாங்கணும் வெற்றி பெறணும் அதுதான் அவர்கள் நிலை , மக்கள் பிரச்சனைக்கு முன்வர மாட்டார்கள். கண்துடைப்பான அரசியல் தான் நடக்கிறது, மக்கள் ஓட்டு போட்டது திமுகவிற்கு அந்த திமுக அரசு ஏதாவது செய்தார்களா? எதுவும் செய்யவில்லை. தேமுதிக-விற்க்கு வாக்களிக்கவில்லை என்றாலும் மக்கள் முன் வந்து மக்கள் பிரச்சனைக்காக முன்னிருக்கும் கட்சியாகும் . தேமுதிக ஊழல் இல்லாத கட்சி என மக்கள் சொல்கிறார்கள் ,ஆனால் ஓட்டு மட்டும் போட மாட்டார்கள் ஏனென்று கேட்டால் ..... தேமுதிக காசு கொடுக்காது அப்படி காசு கொடுத்தால் தான் ஓட்டு போடுகிறீர்களா ? என்றைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்காக தேமுதிகவின் குரல் ஒலிக்கும்” என பேசினார்.