கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்..!
விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவிலான மக்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர்கள். பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தவெக கட்சியை சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மற்றொரு புறம் பலரும் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டு வருகிறார்கள். இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்யோ அவரது கட்சியினரோ நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறவில்லை என பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த கட்ட செயல்பாடு குறித்து தவெக.,வினரிடம் விசாரித்த போது, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுடன் வீடியோ காலில் பேசி, விஜய் ஆறுதல் தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது. உங்களுடன், உங்களுக்காக நான் இருக்கிறேன் என ஆறுதல் கூறி வருகிறாராம். இதுவரை 4 முதல் 5 குடும்பத்தினருடன் விஜய் பேசி உள்ளாராம். தவெக கட்சி சார்பில் நிர்வாகிகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து, விஜய் ஏற்கனவே அறிவித்த நிவாரண நிதிக்கான காசோலையை வழங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.