அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி இணைய உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் தவாகவுக்கு 3 சீட்டுகள் கொடுக்க முன் வந்துள்ளதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேல்முருகனுடன் பேசி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
2021 சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி இணைந்தது. திமுக கூட்டணியில் தவாகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் போட்டியிட்டார். சுமார் 4,600 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை வீழ்த்தி வேல்முருகன் வென்றார். இதனையடுத்து இம்முறையும் திமுக கூட்டணியில் தவாக தொடரும் என்று வேல்முருகன் கூறி வந்தார். ஆனால் திமுக தலைமை தரப்பில் தவாகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையோ, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையோ நடத்த அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் தவாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வேல்முருகன் நடத்தி இருந்தார்.
அப்போதே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவினை வேல்முருகன் எடுத்ததாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய முடியாது என்பதால், முடிவு எடுப்பதை தாமதப்படுத்தி வந்தார். அதேபோல் திமுக தரப்பிடம் நெய்வேலி தொகுதி உட்பட 2 தொகுதிகள் மற்றும் சில கோரிக்கைகளை வேல்முருகன் முன் வைத்திருக்கிறார். இதற்கு அறிவாலயம் சீனியர்களே ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்கனவே வேல்முருகனின் செயல்பாடுகள் மீது முதல்வர் ஸ்டாலினும் அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான முடிவை நாளை அறிவிக்க உள்ளதாக வேல்முருகன் கூறியுள்ளார். இதன் மூலமாக திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
அதேபோல் வேல்முருகன் தரப்புடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இணைந்தால் 3 தொகுதிகள் கொடுக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஆனால் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற ஆஃபர் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் வேல்முருகன் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. பாஜக, பாமக உடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியான பின், வேல்முருகன் தரப்பை எடப்பாடி பழனிசாமி சந்தித்து தொகுதி பங்கீடு செய்வார் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.