×

இன்று முதல் 3 நாட்களுக்கு மருதமலை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை!

 

முருகப் பெருமானின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை முதலே மருதமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி சுமந்தும் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தொடங்கி ஜூன் 1 வரை அடுத்த 3 நாட்களுக்குப் பக்தர்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்கள் எதற்கும் மருதமலை மலைப்பாதையில் மேலே செல்ல அனுமதி கிடையாது. திருவிழாக் காலங்களில் குறுகலான மலைப்பாதையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது வாகனங்களை அடிவாரத்தில் உள்ள பிரத்யேக வாகன நிறுத்துமிடங்களிலேயே நிறுத்திவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சொந்த வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்தும் பக்தர்கள், அங்கிருந்து திருக்கோயில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு மினி பேருந்துகள் மூலமாக மட்டுமே மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவர். அல்லது, பாரம்பரிய முறைப்படி மலைப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தியும் பக்தர்கள் மலைக்குச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.