×

“நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை; அவரும் அந்த இடத்தில் இல்லை”- வேன் ஓட்டுநர்

 

நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை, கேட் கீப்பர் அந்த இடத்தில் இல்லை, கேட் திறந்து தான் இருந்தது. அதனாலதான் வாகனத்தை இயக்கினேன் என வேன் ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


கடலூாில் இயங்கி வரும் ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று கடலூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் பகுதிக்கு மாணவர்களை ஏற்ற சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சின்னபையன் மகன் சங்கர்(வயது 47) என்பவர் ஓட்டினார். வேனில் சின்னகாட்டு சாகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திராவிடமணி மகள் 11-ம் வகுப்பு படித்து வரும் சாருமதி, 10-ம் வகுப்பு படித்து வரும் அவரது தம்பி செழியன், தொண்டமாநத்தம் விஜயசந்திரகுமார் மகன் 10-ம் வகுப்பு படித்தும் வரும் விஸ்வேஷ் (15), 6-ம் வகுப்பு படித்து வரும் அவனது தம்பி நிமலேஷ் (12) ஆகிய 4 பேர் ஏறினர். செம்மங்குப்பம் ரெயில்வே கேட் அருகே காலை 7.45 மணிக்கு பள்ளி வேன் வந்தது. அப்போது ரெயில்வே கேட் திறந்து இருந்ததால், சங்கர் வேனை முன்னோக்கி இயக்கி, ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றார். அந்த சமயத்தில், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரெயில் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் பள்ளி வேன் மீது மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். 

வேன் விபத்து சம்பவத்தில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பள்ளி வேன் ஓட்டுநர் கூறுகையில், "நான் செல்லும்போது கேட் திறந்துதான் இருந்தது. வாகனத்தில் 4 மாணவர்கள் இருந்தனர். நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை. ரயில் சென்று விட்டது என நினைத்து கேட்டை கடந்தோம். கேட் கீப்பர் அந்த இடத்தில் இல்லை.  அதனால்தான் வாகனத்தை இயக்கினேன். கேட்டை மூட வேண்டாம் என நான் சொல்லவே இல்லை. ரயில் ஹாரன் சத்தம் கூட அடிக்கல..." என்று கூறினார்.