மீண்டும் பாஜக கூட்டணிக்கு வைகோ வந்தால் எம்பி ஆகலாம்: ராம்தாஸ் அத்வாலே!
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, திமுகவின் சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவா் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அப்போது மாநிலங்களவையில் நிறைவு உரையில் பேசிய வைகோ, ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் அவைத் தலைவர் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் பேசினார்.
இதன்பின்னர் பேசிய பாஜக கூட்டணியில் உள்ள இந்திய குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்.பி. ஆகலாம் என்று பேசினார். “வைகோவை வழியனுப்பி வைக்க நான் விரும்பவில்லை. அவரால் மாநிலங்களவைக்கு மீண்டும் வர முடியும். அவர் எங்களுடன் வந்தால்(கூட்டணி) மீண்டும் மாநிலங்களவைக்கு வரலாம். நாட்டுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு அவரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 1990ல் அவர் முதன்முதலில் மக்களவைக்கு வந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. அதனால் அவரை வழியனுப்பி வைக்க எனக்கு விருப்பமில்லை” என்று பேசினார்.
நாடாளுமன்றத்திலேயே ராம்தாஸ் அத்வாலே வைகோவை பாஜக கூட்டணிக்கு அழைத்திருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்க பாஜக ஒப்புக் கொண்டதால், கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. தற்போது நாடாளுமன்றத்திலேயே பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் வைகோ மீண்டும் எம்பி ஆகலாம் என்று கூறி இருக்கின்றனர். இதனால் மதிமுக – திமுக உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.