`ஜனநாயகன்’ படத்திற்கு எதிராக கருப்பு கொடி - போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்
உசிலம்பட்டி அருகே தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்திற்கு எதிராக கிராம மக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டியும், கருப்பு கொடி ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்-ன் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன் திரைப்படம். தணிக்கை சான்று பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் இத்திரைப்படம் வெளியிட முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் சமூக வலைதளத்தில் இத்திரைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில், உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பிரச்சினைகளை உண்மைக்கு மாறாக சித்தரித்து திரைப்படத்தில் காட்சி படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பார்வட் ப்ளாக் கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பாபட்டி தேர்தல் தொடர்பான காட்சிகளை நீக்க கோரியும், இப்படத்தின் இயக்குனர் ஹச்.வினோத் மற்றும் நடிகர் விஜய் பொது மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் பாப்பாபட்டி கிராமத்தில் பாப்பாபட்டி, பசுக்காரன்பட்டி, பேயம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டியும், கருப்பு கொடி ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உண்மைக்கு மாறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்க கோரியும், பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும் என கண்டன கோசங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.