சரக்கு கப்பல்களுக்கு 20% வரி வசூலிக்கும் திட்டம் இல்லை - அதிபர் டிரம்ப்..!
உலகின் மிக முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் பாதுகாப்பு வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்குப் பதிலாக அந்த வழியாகச் செல்லும் கப்பல்களின் சரக்கு மதிப்பில் 20 சதவீதத்தை அமெரிக்காவிற்குக் கட்டணமாக வழங்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
இந்நிலையில் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து சரக்குக் கப்பல்களுக்கும் 20 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவத்த அமெரிக்கா தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது. இந்த வரி விதிப்பு நடைமுறையை வாபஸ் பெறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த வரி விதிப்புக்கு மாற்றாக, வளைகுடா நாடுகளுடனான "வர்த்தகம் மற்றும் முதலீட்டு" ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், வரி விதிப்பு வாபஸ் பெறப்பட்டாலும், ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, அதிபர் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக ஊடகப் பக்கத்தில், "ஈரானைத் தவிர மற்ற அனைத்துக் கப்பல் போக்குவரத்திற்கும் ஹார்முஸ் நீரிணை திறந்தே இருக்கும். ஈரானின் பொய் பேசும், வன்முறையான மற்றும் தீங்கிழைக்கும் தலைமை தான் இதற்குக் காரணம். இது அவர்களை முழுமையான அழிவை நோக்கி அழைத்துச் செல்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் திறனை முடக்குவதை நோக்கமாகக் கொண்டு, அமெரிக்கா தொடர்ந்து 3-வது இரவாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் துறைமுகங்களுக்கு மீண்டும் கடற்படை முற்றுகையை அறிவித்ததுடன், அந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீத சரக்கு வரியையும் விதித்திருந்தார். இதற்குப் பதிலடியாக, குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறிய ஈரான், ஹார்முஸ் நீரிணையை நிர்வகிப்பதில் அமெரிக்கா தலையிட்டால் அது போர்ப் பிரகடனமாகவே கருதப்படும் என்றும் எச்சரித்துள்ளது.