×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  : ஓபிஎஸ் - ஈபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
 

 

அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை முதல் விருப்ப மனுக்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் ,நகர மன்ற வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பகுதிகளுக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வரும் கழக உடன்பிறப்புகள் நாளை  (26 ஆம் தேதி) முதல் 28ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் உரிய கட்டண தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

இதில் சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள் மற்றும் விருப்பமான விண்ணப்ப படிவங்களை கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சென்னையை சேர்ந்த மாவட்டக் கழகங்களின் மூலம் தலைமை கழகத்தில் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி பதவிகள் மற்றும் கட்டண விபரங்களும் இதில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் கட்டணத் தொகை 5,000. நகர மன்ற வார்டு உறுப்பினர் கட்டண தொகை 2500 .பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 1500 என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கனவே விருப்பமனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள், அதற்கான கட்டண ரசீதை வைத்திருப்பவர்கள் மட்டுமே அதனை சம்பந்தப்பட்ட மாவட்ட கழக அலுவலகங்களில், சமர்ப்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.  சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் விருப்பமான பெறுவது சம்பந்தமான விபரங்களை,  கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.  அதே போல கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விருப்ப மனுக்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.