ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்: உக்ரைன் அதிபர் புத்தாண்டு உரை..!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 21 நிமிடம் உரையாற்றினார். ஏறக்குறைய 4-ம் ஆண்டை நோக்கி போர் சென்று கொண்டிருக்கும் நிலையில், உக்ரைனியர்களிடையே சோர்வு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிட்டார். ஆனால், அதனை வீழ்ச்சி என தவறாக கருதி விட கூடாது என்றும் கூறினார்.
இவ்வளவு ஆண்டுகளாக நடந்து வரும் போரை, அவர் 2-ம் உலக போரின்போது, உக்ரைனின் சில பகுதிகளை நாசி படையினர் கைப்பற்றியிருந்த கால கட்டத்துடன் ஒப்பிட்டார். அவர் ஆற்றிய உரையின்போது, உக்ரைனுக்கு அமைதி வேண்டும். போரை முடிவுக்கு கொண்டு வரவே நாங்கள் விரும்புகிறோம். உக்ரைனின் முடிவுக்கு அல்ல.
நாங்கள் களைத்து போய் விட்டோமா? என கேட்டால்.. ஆம். அது உண்மைதான். அதற்காக நாங்கள் சரணடைய தயார் என்பது அதன் பொருளா? அப்படி யாரேனும் நினைக்கிறார்கள் என்றால் அது பெரிய தவறு என கூறினார். போரை நிறுத்தவே விரும்புகிறோம். ஆனால் நாங்கள் சரண் அடைய மாட்டோம். வலுவான ஒப்பந்தத்திலேயே நான் கையெழுத்திடுவேன். வலுவிழந்த ஒப்பந்தம் போர்கள் நீளவே வழிசெய்யும் என்றும் அவர் கூறினார். அதனாலேயே ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும், ஒவ்வொரு முடிவும் அதற்கேற்ப எடுக்கப்படுகிறது.
அனைவருக்கும் ஆற்றல் வாய்ந்ததோர் அமைதியை கிடைக்க செய்ய, அது ஒரு நாளுக்கோ, ஒரு வாரத்திற்கோ அல்லது 2 மாதங்களுக்கோ என்றில்லாமல், பல ஆண்டுகளுக்கான அமைதியை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.