×

மனைவி காலில் கூட விழுங்கள்; தவறில்லை- உதயநிதி ஸ்டாலின்

 

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் சின்னியம்பாளையத்தில் 81 ஏழை ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், கழக செயற்திட்டக்குழு உறுப்பினருமான மு.கண்ணப்பன், முன்னாள் அமைச்சரும், கழக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி, மற்றும்,  தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் வரவேற்புரையாற்றினார். வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், தங்க தாலி, பட்டு புடவை, பட்டு வேஷ்டி,  கட்டில், மெத்தை, பிரிட்ஜ், டிவி, 2 குத்துவிளக்கு, ஹாட்பாக்ஸ், மிக்ஸி, கிரைண்டர், சில்வர் குடம், சில்வர் பாத்திரம், தாம்பூழம், பீரோ உள்ளிட்ட  ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கரூர் மாவட்ட அமைச்சராக இருந்தாலும் கோவை மாவட்ட பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை முதலமைச்சர் நியமித்தார். அவர் உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத வெற்றியை தேடி தந்தவர். அவர் தான் முழு வெற்றிக்கு  காரணம். கடுமையான உழைப்பாளி. மணமக்களுக்கு தாலி, பட்டுவேஷ்டி சேவை உட்பட சீர் வரிசை பொருட்களை பார்த்து பார்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்துள்ளார். இங்கு நடந்தது சுய மரியாதை திருமணம். யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அப்போது இந்த திருமணத்தை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதற்கு அங்கீகாரம் கொடுக்க வலியுறுத்தியவர் பெரியார், முன் மொழிந்தவர் அண்ணா, அதனால் தான் தொடர்ந்து கலைஞரும், முதல் அமைச்சரும் திருமணத்தை சுயமரியாதை திருமணத்தை நடத்தி வருகின்றனர்.

யாரும் யாருக்கும் அடிமை இல்லை. மணமக்கள் அதிமுக, பாஜக போல் இருக்காதீர்கள். யாருடைய காலிலும் விழாதீர்கள், காலில் விழுந்தவர்கள் நிலைமை என்ன என்று தெரியும். பெற்றோர் மற்றும் அவரவர் முன்னோரின் காலில் விழுங்கள். தவறு செய்தால் மனைவி காலில் கூட விழலாம். ஆனால் உரிமையை விட்டு கொடுக்காதீர்கள். இங்கு வந்துள்ள மணமக்களுக்கு மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஒரு வேண்டுகோள். பிறக்க கூடிய குழந்தைகளுக்கு சுத்தமான தமிழ் பெயர்கள் வையுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்தி மொழியை கொண்டு வருகிறார்கள். 

வீட்டில் அரசியல் பேசுங்கள். தமிழ்நாட்டில், முதல் அமைச்சர் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். ஒன்றிய அரசு என்ன செய்கிறது? திமுக ஆட்சிக்கு வந்த போது ரூ.5 லட்சம் கோடி கடன் அதிமுக அரசு விட்டு சென்றது. கொரோனா தொற்று. கோவையில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டபோது இந்தியாவிலேயே முதல்முறையாக முதல் அமைச்சர் கொரோனா காலத்தில் ஆஸ்பத்திரிக்குள் சென்று நோயாளிகளை சந்தித்தார். எனவே வீட்டில் அரசியல் பேசுங்கள், அப்போதுதான் என்ன நடக்கிறது என்பது தெரியும். சிலர் தேர்தல் வரும்போது தான் வெளியே வருவார்கள். தேர்தல் முடிந்ததும் உள்ளே சென்று விடுவார்கள்.
பிரச்சனை என்றால் வெளியே வருவார்கள். அதிமுக, பாஜகவினர் மக்களை சந்திக்க மாட்டார்கள்.

ஈரோடு இடைத்தேர்தலில் வந்தார்கள். அடுத்த 8 மாதங்களுக்கு வர மாட்டார்கள். மீண்டும் பாராளுமன்ற தேர்தலின் போது மட்டும் தான் வருவார்கள். நாங்கள் தற்போது தேர்தல் நடைபெறாத நேரத்தில் கூட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். நாங்கள் மக்களோடு இருந்து மக்களுக்காக பணி செய்வோம். எனவே நீங்கள் இந்த அரசுக்கு எப்போதும் துணை இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.