×

பிரதமர் மோடி தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை- உதயநிதி ஸ்டாலின்

 

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறை பரனிபுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி குறித்த தலைப்பில் பேச்சாளர்கள் பேசினார்கள். 

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பயிற்சி பாசறையை திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 5 ம் தேதி ஆரம்பித்தோம். முதலில் மாவட்டத்திற்கு ஒரு கூட்டம் என ஆரம்பித்தோம். பின்னர் தொகுதிக்கு ஒன்று என ஆரம்பிக்க தலைவர் உத்தரவிட்டார். இன்று நடந்தது கடைசி கூட்டம். இது முடிவல்ல இது தான் ஆரம்பம், சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கு காரணம் நான் அல்ல கருணாநிதி, நமது தலைவர் மற்றும் இளைஞர் அணி. இந்த வெற்றி கண்டிப்பாக தொடரும். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிற்சி பாசறை நான் வந்தால் தான் நடத்துவேன் என்று கூறி விட்டார் அதனால் வந்துள்ளேன். நமது தலைவர் கூட 
பொதுக்குழுவில் பயிற்சி பாசறை குறித்து வாழ்த்தி பேசினார். 234 தொகுதிகளில் 270 பயிற்சி பாசறை நடத்தி உள்ளோம். பயிற்சி பாசறை 2.0 தொடங்க வேண்டும், பிரதமர் மோடி தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை, இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார். மோடிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் மு.க.ஸ்டாலின், மோடியின் முகத்திரையை கிழிப்போம். திமுக மட்டும் தான் பயிற்சி பாசறை நடத்த முடியும் அதிமுகவால் நடத்த முடியாது” எனக் கூறினார்.