செங்கோட்டையன் கோட்டையை எட்டிகூட பார்க்காத விஜய்- பரபரப்பு பின்னணி
தமிழக அரசியல் களம் கடந்த 3 வாரங்களாக தகித்துக்கொண்டு இருந்தது. தவெக தலைவர் விஜய் தனது ஓய்விற்கு இடையே தவெகவின் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்ற மூத்த தலைவர்களுக்கு தொடர் பிரச்சாரங்களை செய்தார். ஆனால் ஈரோடு மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்காக அவர் ஒருமுறை கூட பிரச்சாரம் செய்யாமல் தவிர்த்து உள்ளார்.
அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத தூணாகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் வலம் வந்தவர் கே.ஏ. செங்கோட்டையன். சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அ.தி.மு.க-வில் பல தேர்தல்களைச் சந்தித்தவர், ஜெயலலிதாவிற்கே தேர்தல் பயணத் திட்டங்களை வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூகவாதி எனப் புகழப்படும் செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்தபோது, அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றே பலரும் கருதினர். விஜய்யின் அரசியல் வருகைக்கு ஒரு வலுவான அடித்தளத்தையும், அனுபவத்தையும் செங்கோட்டையன் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், த.வெ.க-வின் தற்போதைய செயல்பாடுகள் செங்கோட்டையன் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
அனுபவம் வாய்ந்த மூத்த தலைவராக இருந்தும், த.வெ.க தலைமையைச் சந்திப்பதற்கே செங்கோட்டையன் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. கட்சி முடிவுகளிலோ அல்லது வியூகங்களிலோ செங்கோட்டையனின் ஆலோசனைகள் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படவில்லை என்கிற புலம்பல் கோபிசெட்டிபாளையம் தேர்தல் அலுவலகத்தில் எதிரொலிக்கிறது. இந்த அதிருப்தியின் உச்சமாக அமைந்திருப்பது விஜய்யின் தேர்தல் பிரசாரப் பயணம். தமிழகம் முழுவதும் ஓய்விற்கு இடையில்.. அவ்வப்போது சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்ட விஜய், கட்சியின் நட்சத்திர வேட்பாளராகவும், சீனியராகவும் கருதப்படும் செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு மட்டும் பிரசாரத்திற்கு வரவில்லை.ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தேர்தல் பயணத் திட்டங்களை வகுப்பதில் கில்லாடியான செங்கோட்டையன், இப்போது தன் தொகுதிக்கு விஜய்யை வரவழைப்பதற்கான 'ரூட் மேப்'-ல் கூட இடம்பெற முடியவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தன் தொகுதியில் கட்சித் தலைவர் பிரசாரம் செய்வது ஒரு வேட்பாளருக்குப் பெரும் பலமாக இருக்கும். ஆனால், விஜய்யின் இந்தப் புறக்கணிப்பு செங்கோட்டையனுக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதையில் விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.
"தலைமைக்கும் அவருக்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே இணக்கம் இல்லை. பெயரளவில் மட்டுமே அவர் கட்சியில் நீடிக்கிறார்" என த.வெ.க-வின் ஒரு தரப்பினரே ரகசியமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செங்கோட்டையன் மீண்டும் தாய் கழகத்திற்கே (அ.தி.மு.க) திரும்பலாம் அல்லது அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கலாம் என்ற பேச்சுகள் பலமாக அடிபடுகின்றன. திமுக பக்கம் போனால் கூட வியப்பில்லை... ஒரு மூத்த தலைவரைத் தக்கவைத்துக் கொள்வதில் த.வெ.க தலைமை காட்டும் அலட்சியம், அக்கட்சியின் எதிர்கால அரசியல் முதிர்ச்சியைச் சந்தேகிக்க வைக்கிறது. கோபிசெட்டிபாளையம் மண்ணில் செங்கோட்டையன் தனித்துவிடப்பட்டிருப்பது, அவருக்கும் விஜய்க்கும் இடையிலான விரிசலை உறுதிப்படுத்துவதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜய்யின் இந்தப் புறக்கணிப்பு உட்கட்சி மோதலாக மாறுமா அல்லது செங்கோட்டையனின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.