×

தோல்வி பயத்தால் விஜயை விமர்சிக்கின்றனர் - செங்கோட்டையன்

 

சென்னை செல்வதற்காக கோபியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்பொழுது அவரிடம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றி கழகத்தில் என்ஜின் இல்லை என்று பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள், இரண்டு இயக்கங்களே இந்த நாட்டை ஆள வேண்டுமா? புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணங்களோடு தான் இந்த இயக்கம் தற்பொழுது வீர நடை போட்டு கொண்டிருக்கிறது என தெரிவித்தார். பல கோடி ரூபாய் வருவாயை இழந்தாலும் விஜய் மக்கள் பணியாற்றுவதற்காக ஒரு இளைஞர் என்ற முறையில் வந்திருக்கிறார், அவரை பற்றி எல்லோரும் கருத்து சொல்வதற்கு காரணம் என்னவென்றால் எல்லோருக்கும் பயம் ஏற்பட்டு இருக்கிறது வெற்றி என்ற இலக்கை அடைய முடியாத காரணத்தினால் தான் அனைவரும் (அரசியல் கட்சிகள்) கருத்துக்களை தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் ஒவ்வொருவருக்கும் தோல்வி பயம் உருவாகி இருப்பதாகவும் சிலருக்கு தோல்வி பயம் என்பது தன்னுடைய இடத்தில் வெற்றி பெற முடியாது என்பதால் தான் ஒவ்வொரு இயக்கங்களும் அவர்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் என கூறினார். 


இளைஞர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் 3 லட்சம் பேரும் தமிழகத்தில் எப்பொழுது தேர்தல்  நடைபெற போகிறது என்று பதிவு செய்துள்ளது இந்திய வரலாற்றில் இடம்பெறப் போகிறது என தெரிவித்தார். ஒரு புதிய தலைமை தமிழகத்தை ஆள வேண்டும் குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆள வேண்டும் என்ற நோக்கம் புதிதாக வாக்களிக்க கூடிய ஒவ்வொருவரின் எண்ணங்களிலும் உள்ளது என்றும் 35 வயதுக்கு கீழ் உள்ள அனைவரது ஒருமித்த கருத்தாகவும் அது  பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது என்றார். மேலும் நான் சில நிகழ்ச்சிகளுக்கு செல்கின்ற பொழுது குழந்தைகள் அவர்களது பெற்றோர்களிடத்தில் பெரியவர்களிடத்திலும் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக எங்களிடம் கூறினார்கள் என தெரிவித்தார். வெற்றி என்பது மக்கள் சக்தியால் யாராலும் தடுக்க இயலாது விஜய் தான் 2026 இல் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார், 234 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெறுவார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். 

அதிமுக நேரடியாக தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சிக்க தொடங்கியுள்ளது குறித்தான கேள்விக்கு அதற்கு காரணம் அவர்களது தோல்வி பயம் தான் என்றும் தோல்வி பயம் ஏற்பட்டதால் தான் இவ்வாறான கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொண்டிருப்பதாகவும் கூறிய அவர் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் நேரடியாக திமுகவிடம் பேச வேண்டுமே தவிர B Team ஆக யார் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று நாட்டு மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் எனவே அதைப் பற்றி கருத்து சொல்ல வேண்டியதில்லை கருத்து சொல்லவும் விரும்பவில்லை அவர்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லட்டும் அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்ட காரணத்தினால்தான் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இரண்டு சட்டங்களாக வெளியிட்டது குறித்து பேசிய அவர் தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாக கொடுக்கப்பட வேண்டியது ஒவ்வொரு நாளும் சிந்தித்து சிந்தித்து தேர்தல் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் எவ்வளவு  தோல்வி பயம் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பதிலளித்தார். ஓ.பன்னீர்செல்வத்திடம் தவெக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.