"இனி ஒரு உன்னத உயிரும் அதற்காக நாம் இழக்கக் கூடாது.."- ஆதவ் அர்ஜூனா
மொழி உரிமைப் போராளி தோழர் சிவக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!! என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில், “இந்தி திணிப்பை எதிர்த்து, ரயில் நிலையத்தில் இந்தி பெயரழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்க செயல்பாட்டாளர் தோழர் சிவா திலீபன் எனும் திரு. சிவக்குமார் அவர்கள், தமிழ்நாட்டின் மொழி உரிமைக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கும் செய்தி மன வேதனையைத் தருகிறது.தோழர் சிவக்குமார் அவர்களின் தியாகம், தமிழக மொழி உரிமைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நிலைக்கும்; என்றென்றும் போற்றப்படும்! அவரின் தியாகத்தை நினைவுகூரும் இத்தருணத்தில், "தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை எக்காரணத்தைக் கொண்டும் கைவிட மாட்டோம்; அதனை சீரிய அரசியல் போராட்டங்களின் மூலம் நிலைநாட்டுவோம்; இனி, ஒரு உன்னத உயிரும் அதற்காக நாம் இழக்கக் கூடாது என்று உறுதியேற்போம்." தோழர் சிவக்குமார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், மே 17 இயக்கத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மொழி உரிமைப் போராளி தோழர் சிவக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!” எனக் குறிப்பிட்டுள்லார்.