×

59 டன் தங்கத்தை விற்ற துருக்கி.. ராணுவத்திற்காகத் தங்கத்தை விற்கும் போலந்து!

 

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் சூழல், உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரினால் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை விற்று பணமாக்க (Monetize)த் தொடங்கியுள்ளன.

இந்தத் தங்கம் விற்பனைப் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருப்பது துருக்கி. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் துருக்கியின் மத்திய வங்கி சுமார் 59 டன் தங்கத்தைக் குறைத்துள்ளதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது. இதில் சில பகுதிகள் நேரடியாக விற்கப்பட்டாலும், பெரும்பாலானவை 'ஸ்வாப்' (Swap) ஒப்பந்தங்கள் மூலம் வெளிநாட்டுச் செலாவணிக்காகப் பரிமாறப்பட்டுள்ளன.

துருக்கிக்கு இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2023-ம் ஆண்டிலும் கடும் பணவீக்கத்தைச் சமாளிக்க 159 டன் தங்கத்தை விற்று, பிறகு நிலைமை சீரானதும் மீண்டும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாத நிலவரப்படி 603 டன் தங்கம் வைத்திருந்த துருக்கி, இப்போது மீண்டும் 'எமர்ஜென்சி' மோடிற்கு மாறியுள்ளது.

துருக்கி ஒரு பக்கம் என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்கத்தை வேட்டையாடிச் சேர்த்த போலந்து (Poland), இப்போது தன் ராணுவத்திற்காகத் தங்கத்தை விற்கத் தயாராகிவிட்டது. சுமார் 13 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்று, நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட்டை இரண்டு மடங்காக உயர்த்த அந்நாட்டு மத்திய வங்கித் தலைவர் ஆடம் கிளாபின்ஸ்கி திட்டமிட்டுள்ளார்.