×

கூட்டணி குறித்து டிடிவி தினகரன் அறிக்கை!

 

கூட்டணி விவகாரத்தில் தயக்கமோ, அழுத்தமோ, குழப்பமோ இல்லை. உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வரும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அறிக்கையில், “கடந்த 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்தச் சூழலில் சில ஊடகங்கள், கூட்டணி விவகாரத்தில் தயக்கம், குழப்பம், அழுத்தம் என பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதோடு, கடந்த சில தினங்களாக கழக நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் அவர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

கழக பொதுக்குழு நிகழ்ச்சிக்குப் பின்பாக, சொந்த வேலைகள் காரணமாகவும், பொங்கல் பண்டிகை நாட்கள் வருவதாலும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்படவில்லை. அதே நேரத்தில், கூட்டணி தொடர்பாக கழகப் பொதுச்செயலாளர் அவர்களுக்கு எந்தவொரு தயக்கமும், குழப்பமும், அழுத்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை அறிவிப்பார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். வருகின்ற 17ஆம் தேதி பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் விழா அன்று சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்கவுள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடபட்டுள்ளது.