“மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்” இபிஎஸ் செயலுக்கு டிடிவி தினகரன் பதில்..!
ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எடப்பாடி பழனிசாமி மிரட்டிய விவகாரம் தொடர்பாக பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக நிர்வாகிகல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாள்அர் ஏழுப்பட்டி பாலு மற்றும் மாவட்ட , மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “தேர்தல் கூட்டணி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். யாரிடமும் மண்டியிடாத இயக்கம் அமமுக. நாம் உண்மையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதனால் உறுதியான, சரியான வழியில் நாம் செல்வோம். வருகிற சட்டசபை தேர்தலில் அமமுக நிச்சயம் முத்திரை பதிக்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் யார் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக உறுதியாக செயல்படுவோம்” என்றார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம், ஆம்புலன்ஸ் ஓட்டுரை எடப்பாடி பழனிசாமி மிரட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்.