×

"நிலைமை கைமீறி போவதற்குள்... கவனம் முதல்வரே" - டிடிவி தினகரன் அலர்ட்!

 

தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் சென்றுவிட்டது. நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரத்து 978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 98 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களிலுள்ள அதே கட்டுப்பாடுகள் தான் சென்னையிலும் இருக்கின்றன.

 

ஆகவே சிறப்பு கவனம் எடுத்து சென்னையில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பு அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தலைநகரில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.

அடுத்து பொங்கல் பண்டிகை வருவதால் சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக நோய்ப் பரவல் தமிழகம் முழுவதும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசு இதனை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலைமை கை மீறிப் போவதற்குள் தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.