தரமற்ற பாலங்களை கட்டி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதா? - டிடிவி தினகரன் கண்டனம்
தரமற்ற பாலங்களை கட்டி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிபட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலம் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதால் தொண்டமானூர், கிருஷ்ணாபுரம், பெருந்துறைப்பட்டு, எடத்தனூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு அத்தியாவசியத் தேவைகளுக்காக சுமார் 15கி.மீ சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 15.90 கோடி ரூபாயில் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட உயர்மட்ட பாலம் 90 நாட்களுக்குள்ளாக வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பது திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மொத்த பாலங்களின் தரத்தையும், உறுதித் தன்மையையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.