×

சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுக: டிடிவி தினகரன்

 

அன்பும், அறமும் மனிதர்களிடம் தழைத்தோங்க உயிர் கொடுக்கும் பெருமைமிகு தாய்மையை எந்த நாளும் போற்றுவோம் என்ற செய்தியுடன் பெண்கள் அனைவருக்கும்  உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலாவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற இதயதெய்வம் அம்மா அவர்கள் மகளிருக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியதை இந்நாளில் நினைவு கூர்கிறேன். மகளிருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு அடிதளமிட்டவர் அம்மா அவர்கள். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடங்களை ஒதுக்கி பெண்களை அதிகாரமிக்கவர்களாக, அரசியல் அறிந்தவர்களாக மாற்றுவதற்கான தொடக்கத்துக்கு அடித்தளமிட்டவரும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான். 

உலக மகளிர் தினத்தன்றில் மட்டுமின்றி என்றென்றும் பெண்களைப் போற்றினால் மட்டுமே இந்த உலகம் அன்புடனும், அறத்துடன் திகழும் என்பதை நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும். 
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அதேநேரத்தில் அவர்களைச் சுதந்திரமாக செயல்படவும் அனுமதிக்க வேண்டும் எனவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படாமல் அவர்களைப் பாதுகாப்பதற்கும் இந்த நாளில் உறுதி ஏற்போம். மேலும் சட்டப்பேரவைகள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.