டெல்லியில் பாஜக தலைவர்களுடன் ரகசிய சந்திப்பா?- டிடிவி தினகரன் விளக்கம்
அமமுக மதுரை மாநகர் தெற்கு மாவட்ட சார்பில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “அரசியல் ரீதியாக எது நடந்தாலும் என்னையும், அமமுகவையும் தொடர்புப்படுத்தி அரசியல் விமர்சகர்கள் பேசுகிறார்கள். நான் தூண்டிவிட்டு தான் த.வெ.க வில் செங்கோட்டையன் சேர்ந்ததாக சொல்கிறார்கள். ஓபிஎஸ் எந்த முடிவெடுத்தாலும் நான் தான் தூண்டிவிடுவதாக கூறுகிறார்கள். ஓபிஎஸ் முடிவெடுத்துவிட்டார், TTV தினகரன் இன்னும் முடிவெடுக்கவில்லை என விவாத மேடைகளில் நெறியாளர்கள் பேசுகிறார்கள். அமமுக என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். எங்கள் தகுதியான வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கின்ற கூட்டணிக்கு தான் நாங்கள் செல்வோம். திமுகவில் 7 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு அறிவித்து விட்டார்களா? நாங்கள் புதிதாக ஒரு கூட்டணியில் செல்லவிருக்கிறோம் என்றால் எத்தனை தொகுதிகள் என்று பேசிய பிறகு தான் கூட்டணிக்கு செல்ல முடியும்.
தமிழ்நாட்டில் தற்போது கூட்டணி தலைமை வகிக்கும் கட்சிகளும், புதிதாக கூட்டணி உருவாக்க நினைக்கும் கட்சிகளும் நாங்கள் தங்களது கூட்டணியில் வர வேண்டும் என பேசுவது உண்மை. ஆனால் நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. அண்ணாமலை எங்களை அலைபேசியிலும், நேரிலும் NDA கூட்டணியில் வர வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறார். டெல்லிக்கு சென்று விட்டு வந்தாலோ, தலைவர்களை சந்தித்தாலோ, அழுத்தம் கொடுத்ததாக பேசி ஊடகத்தின் விருப்பத்தை எங்களிடம் திணிக்கிறார்கள். நாங்கள் எந்த முடிவாக இருந்தாலும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்வோம். ஊடகங்கள் எங்கள் மீது சேற்றை வாரி இருந்தாலும் உங்கள் ஆசைக்கு நாங்கள் முடிவெடுக்க மாட்டோம். நான் பெங்களூரில் இருந்து டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்ததாக பரப்பப்படும் செய்திகள் உண்மையல்ல. பழைய கூட்டணியில் உள்ளவர்கள் கூட்டணிக்காக என்னிடம் பேசுவது உண்மை. ஆனால் நான் யாரையும் சந்திக்கவில்லை. எந்த அழுத்தமும் எனக்கு இல்லை. கூட்டணிக்காக யாருடைய அழைப்பையும் நிராகரிக்கவில்லை. நான் தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்றே நான் இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவெடுத்தால் நான் சொல்கிறேன்.திமுக கொடுத்த முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றவில்லை. 2024 தேர்தலில் எப்படியோ திமுக வுக்கு மக்கள் வாக்களித்து விட்டார்கள். இந்த முறை திமுகவுக்கு எதிராக தான் வாக்கு அளிப்பார்கள். நாங்கள் கூட்டணி அமைத்த பின் நிபந்தனைகளை வைப்போம்” என்றார்.