×

கை அகற்றப்பட்டு உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குக - டிடிவி தினகரன்...

 


 உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன் , “சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி  வேதனை அளிக்கிறது.  மருத்துவர்களின் அலட்சியத்தால், மேற்சிகிச்சையின்போது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக குழந்தையின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இப்போது அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறது.

  மருத்துவத்துறை அதிகாரிகளும், அமைச்சரும் குழந்தை உயிரிழப்பு குறித்து  அளித்துள்ள பதில் ஏற்கனவே துன்பத்தில் உள்ள பெற்றோரை மேலும் துன்பத்தில் ஆழ்த்துவதுபோல் உள்ளது.  உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், பெற்றோரின் குற்றச்சாட்டை உரிய விசாரணை  நடத்தி காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்..