×

வீட்டை காலி செய்ய சொன்னதால் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி!

 

உளுந்தூர்பேட்டை அருகே குடும்பத்தோடு மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஆத்தூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பூங்கொடி என்பவர் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக குடும்பத்தோடு வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வசித்து வரும் வீடு வருவாய் துறை கணக்கில் பொது தெரு என உள்ளதால் வருவாய்த்துறை சார்பில் பலமுறை ஆக்கிரமிப்பு வீடு அகற்றுவதற்காக முயன்றனர். 

இந்நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வீட்டை அகற்றுவதற்காக உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மணிமொழியன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர், அப்போது தங்கள் வசித்துவரும் வீட்டிலிருந்து வெளியேற மாட்டோம் என பூங்கொடி குடும்பத்தினர் வீட்டினுள் இருந்து கொண்டு தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.