×

 முதல்வருக்கு திருவாரூரில் பாராட்டுவிழா - டெல்டா விவசாயிகள் அறிவிப்பு

 

மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடெங்கிலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  டெல்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

 விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மூன்று மாதங்களில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.   இதனால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு டெல்டா விவசாயிகள் சார்பில் திருவாரூரில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தெரிவித்தார்.

 மூன்று  வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து திருவாரூரில் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்,   ‘’ 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின். 

 தமிழக முதல்வரான பின்னர் தமிழக சட்டமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்.  இந்நிலையில் மூன்று புதிய வேளாண்  சட்டங்களும் ரத்து செய்யப்பட்டதை அடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் விவசாயிகள் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு,   முதல்வருக்கு மிகப்பெரிய பாராட்டு விழா வைக்கவேண்டும் என்று கூறிவருகிறார்கள்.   அதனால் திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தப்படும் .  இன்னும் ஒரு மாதத்திற்கு பின்னர் முதல்வரின் அனுமதி பெற்று அந்த பாராட்டு விழா நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார் .